திருஞானசம்பந்தர் தேவாரம்
இரண்டாம் திருமுறை
2.86 திருநாரையூர்
பண் - பியந்தைக்காந்தாரம்
உரையினில் வந்தபாவம் உணர்நோய்க ளும்ம
    செயல்தீங்கு குற்ற முலகில்
வரையினி லாமைசெய்த அவைதீரும் வண்ணம்
    மிகவேத்தி நித்தம் நினைமின்
வரைசிலை யாகவன்று மதில்மூன் றெரித்து
    வளர்கங்குல் நங்கை வெருவத்
திரையொலி நஞ்சமுண்ட சிவன்மேய செல்வத்
    திருநாரை யூர்கை தொழவே.
1
ஊனடை கின்றகுற்ற முதலாகி யுற்ற
    பிணிநோ யொருங்கும் உயரும்
வானடை கின்றவெள்ளை மதிசூடு சென்னி
    விதியான வேத விகிர்தன்
கானிடை யாடிபூதப் படையா னியங்கு
    விடையான் இலங்கு முடிமேல்
தேனடை வண்டுபாடு சடையண்ணல் நண்ணு
    திருநாரை யூர்கை தொழவே.
2
ஊரிடை நின்றுவாழும் உயிர்செற்ற காலன்
    துயருற்ற தீங்கு விரவிப்
பாரிடை மெள்ளவந்து பழியுற்ற வார்த்தை
    ஒழிவுற்ற வண்ண மகலும்
போரிடை யன்றுமூன்று மதிலெய்த ஞான்று
    புகழ்வானு ளோர்கள் புணருந்
தேரிடை நின்றஎந்தை பெருமா னிருந்த
    திருநாரை யூர்கை தொழவே.
3
தீயுற வாயஆக்கை அதுபற்றி வாழும்
    வினைசெற்ற வுற்ற உலகின்
தாயுறு தன்மையாய தலைவன்றன் நாமம்
    நிலையாக நின்று மருவும்
பேயுற வாயகானில் நடமாடி கோல
    விடமுண்ட கண்டன் முடிமேல்
தேய்பிறை வைத்துகந்த சிவன்மேய செல்வத்
    திருநாரை யூர்கை தொழவே.
4
வசையப ராதமாய வுவரோத நீங்குந்
    தவமாய தன்மை வரும்வான்
மிசையவ ராதியாய திருமார் பிலங்கு
    விரிநூலர் விண்ணும் நிலனும்
இசையவ ராசிசொல்ல இமையோர்க ளேத்தி
    யமையாத காத லொடுசேர்
திசையவர் போற்றநின்ற சிவன்மேய செல்வத்
    திருநாரை யூர்கை தொழவே.
5
உறைவள ரூன்நிலாய வுயிர்நிற்கும் வண்ணம்
    உணர்வாக்கும் உண்மை உலகில்
குறைவுள வாகிநின்ற குறைதீர்க்கு நெஞ்சில்
    நிறைவாற்று நேசம் வளரும்
மறைவளர் நாவன்மாவின் உரிபோர்த்த மெய்யன்
    அரவார்த்த அண்ணல் கழலே
திறைவளர் தேவர்தொண்டின் அருள்பேண நின்ற
    திருநாரை யூர்கை தொழவே.
6
தனம்வரும் நன்மையாகுந் தகுதிக் குழந்து
    வருதிக் குழன்ற உடலின்
இனம்வள ரைவர்செய்யும் வினையங்கள் செற்று
    நினைவொன்று சிந்தை பெருகும்
முனமொரு காலம்மூன்று புரம்வெந்து மங்கச்
    சரமுன் றெரித்த அவுணர்
சினமொரு காலழித்த சிவன்மேய செல்வத்
    திருநாரை யூர்கை தொழவே.
7
உருவரை கின்றநாளில் உயிர்கொள்ளுங் கூற்றம்
    நனியஞ்சு மாத லுறநீர்
மருமலர் தூவியென்றும் வழிபாடு செய்ம்மின்
    அழிபா டிலாத கடலின்
அருவரை சூழிலங்கை அரையன்றன் வீரம்
    அழியத் தடக்கை முடிகள்
திருவிரல் வைத்துகந்த சிவன்மேய செல்வத்
    திருநாரை யூர்கை தொழவே.
8
வேறுயர் வாழ்வுதன்மை வினைதுக்கம் மிக்க
    பகைதீர்க்கு மேய வுடலில்
தேறிய சிந்தைவாய்மை தெளிவிக்க நின்ற
    கரவைக் கரந்து திகழுஞ்
சேறுயர் பூவின்மேய பெருமானு மற்றைத்
    திருமாலும் நேட எரியாய்ச்
சீறிய செம்மையாகுஞ் சிவன்மேய செல்வத்
    திருநாரை யூர்கை தொழவே.
9
மிடைபடு துன்பமின்பம் உளதாக்கு முள்ளம்
    வெளியாக்கு முன்னி யுணரும்
படையொரு கையிலேந்திப் பலிகொள்ளும் வண்ணம்
    ஒலிபாடி யாடி பெருமை
உடையினை விட்டுளோரும் உடல்போர்த் துளோரும்
    உரைமாயும் வண்ணம் அழியச்
செடிபட வைத்துகந்த சிவன்மேய செல்வத்
    திருநாரை யூர்கை தொழவே.
10
எரியொரு வண்ணமாய உருவானை யெந்தை
    பெருமானை உள்கி நினையார்
திரிபுர மன்றுசெற்ற சிவன்மேய செல்வத்
    திருநாரை யூர்கை தொழுவான்
பொருபுனல் சூழ்ந்தகாழி மறைஞான பந்தன்
    உரைமாலை பத்தும் மொழிவார்
திருவளர் செம்மையாகி யருள்பேறு மிக்க
    துளதென்பர் செம்மை யினரே.
11
திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தர் தேவாரம்
இரண்டாம் திருமுறை
2.87 திருநாரையூர்
பண் - பியந்தைக்காந்தாரம்
நேரிய னாகுமல்ல னொருபாலு மேனி
    யரியான்மு னாய வொளியான்
நீரியல் காலுமாகி நிறைவானு மாகி
    யுறுதீயு மாய நிமலன்
ஊரியல் பிச்சைபேணி யுலகங்க ளேத்த
    நலகண்டு பண்டு சுடலை
நாரியோர் பாகமாக நடமாட வல்ல
    நறையூரின் நம்ப னவனே.
1
இடமயி லன்னசாயல் மடமங்கை தன்கை
    யெதிர்நாணி பூண வரையிற்
கடும்அயி லம்புகோத்து எயில்செற் றுகந்து
    அமரர்க் களித்த தலைவன்
மடமயில் ஊர்திதாதை எனநின்று தொண்டர்
    மனம்நின்ற மைந்தன் மருவும்
றடமயி லாலநீடு குயில்கூவு சோலை
    நறையூரின் நம்ப னவனே.
2
சூடக முன்கைமங்கை யொருபாக மாக
    அருள்கார ணங்கள் வருவான்
ஈடக மானநோக்கி யிடுபிச்சை கொண்டு
    படுபிச்ச னென்று பரவத்
தோடக மாயொர்காதும் ஒருகா திலங்கு
    குழைதாழ வேழ வுரியன்
நாடக மாகவாடி மடவார்கள் பாடும்
    நறையூரின் நம்ப னவனே.
3
சாயல்நன் மாதோர்பாகன் விதியாய சோதி
    கதியாக நின்ற கடவுள்
ஆயக மென்னுள்வந்த அருளாய செல்வன்
    இருளாய கண்டன் அவனித்
தாயென நின்றுகந்த தலைவன் விரும்பு
    மலையின்கண் வந்து தொழுவார்
நாயக னென்றிறைஞ்சி மறையோர்கள் பேணும்
    நறையூரின் நம்ப னவனே.
4
நெதிபடு மெய்யெம்ஐயன் நிறைசோலை சுற்றி
    நிகழம் பலத்தின் நடுவே
அதிர்பட ஆடவல்ல அமரர்க் கொருத்தன்
    எமர்சுற்ற மாய இறைவன்
மதிபடு சென்னிமன்னு சடைதாழ வந்து
    விடையேறி இல்பலி கொள்வான்
நதிபட வுந்திவந்து வயல்வாளை பாயும்
    நறையூரின் நம்ப னவனே.
5
கணிகையோர் சென்னிமன்னு மதுவன்னி கொன்றை
    மலர்துன்று செஞ்சடை யினான்
பணிகையின் முன்னிலங்க வருவேட மன்னு
    பலவாகி நின்ற பரமன்
அணுகிய வேதவோசை யகலங்க மாறின்
    பொருளான ஆதி யருளான்
நணுகிய தொண்டர்கூடி மலர்தூவி யேத்து
    நறையூரின் நம்ப னவனே.
6
ஒளிர்தரு கின்றமேனி யுருவெங்கு மங்க
    மவையார ஆட லரவம்
மிளிர்தரு கையிலங்க அனலேந்தி யாடும்
    விகிர்தன் விடங்கொள் மிடறன்
துளிதரு சோலையாலை தொழில்மேவ வேதம்
    எழிலார வென்றி யருளும்
நளிர்மதி சேருமாடம் மடவார்க ளாரும்
    நறையூரின் நம்ப னவனே.
7
அடலெரு தேறுகந்த அதிருங் கழற்கள்
    எதிருஞ் சிலம்பொ டிசையக்
கடலிடை நஞ்சமுண்டு கனிவுற்ற கண்டன்
    முனிவுற் றிலங்கை யரையன்
உடலொடு தோளனைத்து முடிபத் திறுத்தும்
    இசைகேட் டிரங்கி யொருவாள்
நடலைகள் தீர்த்துநல்கி நமையாள வல்ல
    நறையூரின் நம்ப னவனே.
8
குலமலர் மேவினானும் மிகுமாய னாலும்
    எதிர்கூடி நேடி நினைவுற்
றிலபல எய்தொணாமை எரியா யுயர்ந்த
    பெரியா னிலங்கு சடையன்
சிலபல தொண்டர்நின்று பெருமைக்கள் பேச
    வருமைத் திகழ்ந்த பொழிலின்
நலமலர் சிந்தவாச மணநாறு வீதி
    நறையூரின் நம்ப னவனே.
9
துவருறு கின்றவாடை யுடல்போர்த் துழன்ற
    வவர்தாமு மல்ல சமணுங்
கவருறு சிந்தையாளர் உரைநீத் துகந்த
    பெருமான் பிறங்கு சடையன்
தவமலி பத்தர்சித்தர் மறையாளர் பேண
    முறைமாதர் பாடி மருவும்
நவமணி துன்றுகோயில் ஒளிபொன்செய் மாட
    நறையூரின் நம்ப னவனே.
10
கானலு லாவியோதம் எதிர்மல்கு காழி
    மிகுபந்தன் முந்தி யுணர
ஞானமு லாவுசிந்தை யடிவைத் துகந்த
    நறையூரின் நம்ப னவனை
ஈனமி லாதவண்ணம் இசையா லுரைத்த
    தமிழ்மாலை பத்தும் நினைவார்
வானநி லாவவல்லர் நிலமெங்கு நின்று
    வழிபாடு செய்யும் மிகவே.
11
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com